sirukathai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
sirukathai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 ஜூன், 2010

குட்டி பூனையும், டிரைவர் ஹீரோவும்


காலை எட்டு மணி, பஸ்சுக்காக காத்திருக்கிறேன். அலுவலகம் செல்ல நேரமாகிவிட்டது. சாலையில் வாகனங்கள் கற்றை கிழித்தபடியும், நேரத்தை விரட்டியபடியும் இரண்டுபக்கமும் சென்றுகொண்டிருந்தது. வித விதமான கார்கள், வாகனங்கள், வித விதமான மனிதர்கள் நேரத்துக்கு கட்டுப்பட்ட இயந்திரங்களாய் நேற்று பாதியில் விட்டு வந்த வேலையை தொடர சென்றுகொண்டிருக்கிறார்கள். கதிரவன் தனது சூடான கரங்களால் சுரீர் என்று அறைந்துகொண்டிருந்தான். வெயில் மேலேற தொடங்கிய நேரம். வியர்வை பிசுபிசுப்பு அதிகமாகிக்கொண்டே வந்தது. என்ன தான் பாடி ஸ்ப்ரே போட்டாலும் அலுவலகம் செல்வதற்குள் நாறிவிடுகிறது, எல்லாம் வெயில் பகவானின் கைங்கர்யம். திடீரென்று வேகமான போக்குவரத்தில் மாற்றம் உண்டானது. 'கிரிச்' 'கிரிச்' என பிரேக் போடுவதும் பின் மெதுவாக நகர்ந்து செல்வதாய்  இருந்தன வாகனகள்.  ஏன் என்ன ஆயிற்று, இங்கு வேக தடை கூட இல்லையே, இந்த சாலையை எப்போதும் சிறப்பாகவே பராமரித்து வருவார்கள், சாலை பழுது என்றுகூட சொல்லமுடியாது. மெல்ல அனைவரின் கவனமும் சாலை மீது விழுந்தது. அதோ, அதோ அங்கே என்ன? இது பூனை குட்டி போலல்லவா  இருக்கிறது. அதிசயமாய் உணர்தேன். இரண்டு பக்கமும் வாகனங்கள் நிறைந்த இவ்வளவு வேகமான சாலையின் நடுவில் எப்படி இந்த குட்டி பூனை சென்றிருக்க முடியும். யார் கொண்டுவிட்டிருக்க முடியும். புரியாத புதிராய் இருந்தது. கார்கள் நின்றதும் அந்த குட்டி பூனை சாலையை கடக்க  அதன் வழக்கமான குணத்தால் பதுக்கி பதுங்கி செல்ல முயன்றது, எங்கே பதுங்க முடியும், இருப்பதோ வாகனங்களின்   சக்கரம் மாத்திரமே. வாணலிக்கு பயந்து அடுப்பில் குதித்த கதையாய்  சக்கரங்களின் அடியில்  பதுங்கிய அந்த பூனை குட்டியை  பார்க்க பார்க்க மனம் பதறியது. எப்படியாவது அந்த பூனை குட்டியை காப்பாற்றும் எண்ணத்தோடு  வாகனங்களை கடந்து சாலையின் மைய பகுதிக்கு வந்தடந்தேன். டிரைவரிடம் வாகனத்தை எடுக்க வேண்டாம் என்று கூறிவிட்டு, காரின் அடியில் குனிந்து  மெல்ல கைகளால் தூக்கினேன். அய்யோ, இத்தனை சிறிய பூனை குட்டிக்கு இவ்வளவு கோபமா,  வாயை  அகலமாக திறந்து அதன் கூர்மையான குட்டி பற்களை வெளியில் காட்டியும், கால்களில் புதைந்து கிடந்த நக கத்திகளை  வெளியில் காண்பித்தும்  கோபமாக சீறியது அந்த குட்டி பூனை. சட்டென்று தூக்கி சாலையின் நடுவில் உள்ள மைய தடுப்பு பாதையில் போட்டேன். அப்பாடா, குட்டி பூனையை காப்பற்றியதில் என்  மனம் லேசாகி சந்தோஷ சாரல் தொற்றிகொண்டது.
அந்த சந்தோஷம் நீண்ட நேரம் நிலைக்கவில்லை, அந்த குட்டி பூனை திடீரென மீண்டும் சாலையை நோக்கி பாய்ந்தது, நானும்  சூழ்நிலை மறந்து அதை காப்பாற்ற அதன் பின் ஓடினேன், சிறக், கிரிச், என்ற சத்தங்கள், சாலையில் வாகனகள் திடீர் பிரேக் இட்டதால் வந்தவை. நல்லவேளை  பூனை தப்பியது, நானும்தான். திட்ட நினைத்த டிரைவர் பூனைக்குட்டியை கண்டதும், வாயை திறக்கவில்லை. மீண்டும் முயற்சித்தேன், வாகனங்களுக்கு  அடியில் ஒளிந்துகொண்ட அந்த பூனை குட்டியை தேடினேன், அது என் கண்களுக்கு புலப்படவில்லை.  உடையெல்லாம் வியர்வையால் நனைந்தது. இனி சாலையின் குறுக்கில் நின்றுகொண்டிருந்தால் சரியாக இருக்காது என்று தோன்றியது. சாலையை கடந்து மீண்டும் பஸ் நிறுத்ததிற்கு வந்தேன். அடடா என் பஸ் பறப்பட்டு சென்று கொண்டிருந்தது. போச்சு. இனிமே 20 நிமிடம் கழித்துதான் அடுத்த பேருந்து. இந்த வெயிலில் இன்னும் 20 நிமிடம் கழித்து தான் அடுத்த பஸ். வெயிலின் வீரியம் அதிகரித்துகொண்டிருந்தது. 

குட்டி பூனையின் நிலைமை என்னவாயிற்று, மனதில் சிறு வலியுடன்  பார்த்தேன்.  நிறுத்தி, நிறுத்தி சென்றுகொண்டிருந்த டிரைவர்களில் ஒரு நபர் மட்டும் சாலையில் அப்படியே நிறுத்திவிட்டு அந்த பூனையை கையில் எடுக்க முயற்சித்தார், முன்போலவே அந்த பூனை சீறிற்று, ஆனால் சற்றும் பயப்படாமல் இரு கைகளாலும் பூனையை திமிரவிடாமல் இறுக்கி பிடித்து தன் வாகனத்தின் பின்புறம் போட்டார். பின்னர் வாகனத்தை மேற்கொண்டு செலுத்த ஆரம்பித்தார் யாரையும் சட்டை செய்யாமல்.
ஒரு உயிரை  காப்பாற்றிய அவர் இப்போது என் கண்களுக்கு பெரிய ஹீரோவாக தெரிந்தார். இப்போது நான் என்னை நினைத்துகொண்டேன், பூனை குட்டியை காப்பாற்ற யாரும் துணியாதபோது நான் மட்டும் முயற்சிதேனே, ஆனால் அந்த பூனை குட்டியின் சீற்றத்தால் மீண்டும் காப்பாற்ற முனையாமல் பயந்து திரும்பிவிட்டேனே. கடைசியில் அந்த பூனை குட்டியையும் நான் காப்பாற்றவில்லை, நேரத்திற்கு அலுவலகமும் போகவில்லை.
உதவி செய்வதற்கு ஈரமனம் மட்டும் போதாது, தைரியமும் வேண்டுமோ.
அந்த டிரைவர் ஹீரோ தானே. 

திங்கள், 17 மே, 2010

கதை : "அந்த இரண்டு நிமிடம்"

"அந்த இரண்டு நிமிடம்"  கதை



                                   சார், சார், கொஞ்சம் எழுந்திருங்க நான் இறங்கனும் என்று அந்த இளைஞன்   எழுப்பியதும் "நான்" எழுந்தேன். அட நல்லா  தூங்கிட்டேன் போல இருக்கு என்று சொல்லியபடி எழுந்து அவன் இறங்க வழி விட்டு நின்றேன். அந்த இளைஞன்  நான் பஸ்ஸில் ஏறும் முன்னே அந்த இருக்கையில் அமர்ந்திருந்தவன், நான் உட்காரும் போது சிறிதளவு நகர்ந்து நான் உட்காரும் அளவிற்கு இடம் கொடுப்பன் என நினைத்து ஏமாந்து போனேன். அவன் என்னை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. இந்த காலத்து பசங்களே இப்படித்தான் பெரியவங்களுக்கு மரியாதையே கொடுக்க தெரியாது, அன்பு என்றால் காதல் மட்டும்தான்னு நினைக்கிறாங்க. இந்த இளைஞர்கள்  தான் இப்படி என்றால், அதோ நிக்கிறாரே அந்த மனிதர், என் வயது தான் இருக்கும், இந்த இருக்கை காலி ஆகும்போது மூன்று இருக்கை தள்ளி நின்றவர் என்னை தாண்டி இருக்கையை பிடிக்க முயன்றவர் நான் சட்டென உட்கார்ந்ததும் ஏமாந்ததாக உணர்ந்து என்னை மனதிற்குள் திட்டியபடி நகர்ந்து சென்றவர் தானே. தனக்கு ஒரு சட்டம், மத்தவங்களுக்கு ஒரு சட்டம். கேட்டா இருக்கையை தந்திருப்பேனே, அவரின் சுயநலத்துக்கு நான் ஏன் அடிபநியனும். நான் கண்டிப்பா பாதுகாப்பா உட்காரனும், என் கையில் உள்ள பையில் ரொக்கமாக சில லட்சங்கள் உள்ளது, என் நண்பனின் மகளுக்கு கல்யாணமாம், என்னிடம் கேட்டான், என் மகளின் கல்யாணத்திற்காக உபரியாக சேர்த்த பணத்தை கொடுப்பதென்று முடிவு செய்து மனைவியிடம் மட்டும் சொல்லிவிட்டு நண்பனை திடீர் சந்தோஷத்திற்கு உள்ளாக்க செல்கிறேன்.

சார், சார், எழுந்திருங்க ........

எனக்கு எரிச்சலாக இருந்தது, என்ன ஆச்சு இந்த பையனுக்கு, யார் கிட்ட பேசறான், நான் தான் இருக்கையிலேருந்து எழுந்து நின்று வழி விடுகிறேனே, ஆனால் மறுபடியும், மறுபடியும் சொன்னதையே சொல்கிறானே என்று நினைத்தபடி அவனை பார்த்தேன்.

அட! யார் இது இங்கு உட்கார்ந்து இருப்பது, என்னை போலவே இருக்கிறாரே, அட "அது" நான்தான். இது எப்படி சாத்தியம், "நான்" இங்கு நிற்கும்போதே அங்கு எப்படி உட்கார்ந்து இருக்க முடியும், யோசிக்க, யோசிக்க உண்மை சுட ஆரம்பித்தது. பஸ்ஸில் உள்ள ஜனங்களும் என் இருக்கை அருகே "என்னை" தள்ளியபடி குழும்பினர்.

என்னாச்சுப்பா? நம்மோட 'உசுர' எடுக்கரதுக்கே வராங்க! வழி விடுங்கப்பா காத்து வரட்டும், என்ன ஆச்சுன்னு பாருப்பா, உயிர் இருக்கா, ஆம்புலன்ச கூப்டுப்பா இப்ப தான் போன் பண்ணி வைக்குரதுகுள்ளே வந்துடுதே, என வித விதமான வார்த்தைகள், சத்தங்கள் கேட்டது. அவர்களின் குரலில் ஒரு அவசரமும், எரிச்சலும் சேர்ந்து கலவையாய் ஒலித்தது.

        என் பெயர் சுந்தரேசன், வயசு 54 முடிந்து இரண்டு மாதம் ஆகிறது. மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உண்டு. மூத்த மகளுக்கு கல்யாணம் ஆகி தாத்தா என்று கூப்பிட ஒரு பெண் குழந்தையும் பெற்று சென்ற மாதம் தான் என் வீட்டிலிருந்து அவளின் மாமியார் வீட்டுக்கு போனாள். மகனோ இன்ஜினியரிங் கல்லூரியில் கடைசி வருடம் படிக்கிறான். மனைவி, நான் என்ன சொன்னாலும் புன்சிரிப்புடன் தலையாட்டிவிட்டு, அதில் ஏதேனும் தவறு இருந்தால் நல்ல மூடில் இருக்கும் போது என் மனம் நோகாமல் எடுத்து சொல்வாள். நண்பார்கள் எப்போதும் போல இன்றும் இளமையுடன் உள்ளது போல "டா" போட்டு பேசும் இனியவர்கள்.

                     இன்னும் எனக்கு எதாவது கடமைகள் உள்ளதா, "மனம்" எண்ணிற்று. மகளுக்கு கல்யாணம் செய்தாகிவிட்டது, நல்ல குடும்பம், நல்ல மாப்பிள்ளை (வரதட்சனை எல்லாம் வேணாம் மாமா!), நல்ல மாமியார் (அவ மருமக இல்ல, எனக்கு பொண்ணு இல்லாத கொறைய தீர்க்க வந்தவ) என நன்றாக இருக்கிறாள். மகனுக்கு கல்லூரியில் கடைசி வருடத்திற்கான முழு கட்டணத்தையும் கட்டியாச்சு, இனிமே கல்லூரியை முடித்து நல்ல வேலையில் சேர்ந்து அவன் பொழச்சுக்குவான். வங்கியில் கொஞ்சம் ரொக்கம் உள்ளது. மனைவிக்கு போதுமான அளவுக்கு நகைகள் உண்டு, வீட்டுக்கு தேவையான அத்தனையும் உண்டு. சில வருடங்களுக்கு முன் நண்பர்கள் சொன்னார்களே என்று அவர்களுடன் சேர்ந்து புறநகரில் வாங்கிய நிலத்தின் மதிப்பு இப்போ பல மடங்கு உயர்ந்து இருக்கு. வேறு என்ன வேண்டும், வேறு என்ன கடமை உள்ளது.

              மனதிற்குள் நெருப்பை பற்றவைத்து போல் தகித்தது. ஏதோ ஒரு குறை உள்ளது அது என்ன, என்ன என்று யோசித்தது. மனம் சட்டென விழித்தது, நினைவு வந்துவிட்டது.

              என் மனைவி என்னிடம் இது வேண்டும், அது வேண்டும் என எதையும் இந்த 25 வருடத்தில் கேட்டதில்லை. ஆனால் சமீபத்தில் ஒரு நாள் "என்னங்க நான் உங்க கிட்ட ஒண்ணு கேட்பேன், மறுக்காம நிறைவேத்தனும் என்ன?" என்று பீடிகை போட்டாள். நானும் மனம் பதைக்க அடடா இவளுக்கு ஏதோ குறை வச்சுட்டோம் போல, அதனால் இவ கேக்கிறதா எப்படியாவது நிறைவேத்தனும் என்று மனதில் முடிவு செய்தவனாக, "சொல்லும்மா, என்ன வேணும் உனக்கு" என்றேன். "எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசைங்க, என் வாழ்க்கை முடியறதுக்குள்ளே எல்லா புண்ணிய ஸ்தலங்களுக்கும், போய் வந்துடனும், தயவு செய்து ஏற்பாடு பண்றீங்களா" என்று அவள் ஏக்கத்துடன் கேட்டது என்னை கரைய வைத்தது, "என்னம்மா இது, இதுக்கு போயா இத்தனை தயக்கம், எனக்கும் இந்த ஆச இருந்தது, ஆனா பயண அலைச்சல் உனக்கு ஒத்துக்கதே என்ற நினைப்பில் உன்கிட்ட சொல்லல, அதுக்கென்ன தாராளமா இந்த வருடத்திலேயே போகலாம்" என்று கூறி முடிக்கும் போது என் கண்கள் கண்ணீரால் நிறைந்து இருந்தது, அவளின் எண்ணமும் என் எண்ணத்தையே ஒத்திருப்பை நினைத்து.

        கடவுளே, அவளுக்கு கொடுத்த வாக்கை எப்படி காப்பாற்ற போறேன், எப்படி நடக்கும் என பல்வேறு மன குழப்பத்தால் என் "மனம்" வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

                         மேலும் சப்தங்கள் பெரிதாகிகொண்டே போனது, அந்த வாலிபன் மற்றவர்களை பார்த்து, ஒரு கை பிடிங்க, பஸ்சுல கடைசில இருக்கிற நீளமான் சீட்ல படுக்க வைக்கலாம் என்றான். பயணிகளில் ஒரு சிலர் மனம் வந்தும், வராமலும் 'என்னை' தூக்கி அந்த கடைசி சீட்டில் படுக்க வைத்தனர். அந்த வாலிபன் தான் இரண்டு கைகளையும் சேர்த்து என் நெஞ்சில் வைத்து மிதமான வேகத்தில் விட்டு விட்டு அழுத்த தொடங்கினான்.

                   இந்த ஜனங்களே இப்படி தான், வேடிக்கை பாக்கறதுன்னா போதும் கூட்டம் சேர்ந்துடுவாங்க, நெருக்கி அடிச்சி முன்னாடி வந்து பார்க்க துடிப்பங்க, யாரோ சிலர் பின்னாலிருந்து தள்ளினார்கள், என் நெஞ்சு முன்னால் உள்ள கம்பியில் மோத......

                            லொக்... லொக்.... இருமல் தொண்டையிலுருந்து எழுந்து அடைபட்டிறிந்த கற்றை வெளியிடவும், உட்செல்லவும் அனுமதித்தது.

சார், சார், எழுந்திருங்க என அந்த இளைஞன்  உலுக்கினான்,

மெதுவாக கண்திறந்தேன், சுற்றிலும் உள்ள 'மனிதர்களை' பார்த்தேன். மெதுவாக எழுந்து உட்கார்ந்ததும் அந்த இளைஜன் யாரிடமோ வாங்கிய தண்ணீரை குடிக்க கொடுத்தான். "சார், இலவச ஆம்புலன்ஸ் கிழே நிக்குது, எதுக்கும் மருத்துவமனைக்கு  போய் டாக்டர் கிட்ட ஒரு செக்-அப் பண்ணிக்குங்க, எப்பவோ  பள்ளியில் சொல்லிகொடுத்த முதலுதவி பாடம் இப்ப உதவி இருக்கு" என்று சொல்லியபடி என்னை கை தாங்கலாக அருகே நின்றிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிவிட்டான். சார், சார், என்றபடி ஓடி வந்த இருக்கையை பிடிக்கமுடியாமல் ஏமாந்து போன நபர், "சார், உங்க பை" என அந்த பணப்பையை என்னிடம் நீட்டினார்.

                             அவசர ஊர்தி மெதுவாக நகர தொடங்கியது, மனம் அந்த இளைஞ்சனை வாழ்த்தியபடியும்,   அறிமுகமில்லாமல் உதவிய உள்ளங்களை நோக்கி என் கரங்கள் தானாக குவிந்து உயர்ந்து அவர்களுக்கு என் நீர் தளும்பிய கண்களால் நன்றி சொன்னேன் .